ரெய்டு எல்லாம் ரொம்ப சாதாரணம்..! ‘அசால்ட்’ காட்டிய விஜயபாஸ்கர்
பொதுவாழ்வில் இதுபோன்ற லஞ்சஒழிப்பு சோதனை தவிர்க்க முடியாதது, அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
சென்னை: பொதுவாழ்வில் இதுபோன்ற லஞ்சஒழிப்பு சோதனை தவிர்க்க முடியாதது, அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு துறையினர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவரது உறவினர்கள் இல்லங்கள், அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை,கோவை என பல நகரங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.
இந் நிலையில் சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தமது இல்லத்தில் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என் வீட்டில் சோதனை தற்போது முடிந்துவிட்டது. பொது வாழ்க்கையில் பயணிக்கும் போது இதுபோன்ற சோதனைகள் வழக்கமான ஒன்றுதான். எதிர்க்கட்சி என்னும் போது இத்தகைய சோதனைகளை தவிர்க்க முடியாது.
நான் கடினமாக உழைப்பவன், இது அனைவருக்கும் நன்றாக தெரியும். சட்டத்தை மதிப்பவன். அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன். எனது வீட்டில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.