தொடர்ந்து ஆப்சென்ட்..பிரதமர் மோடி அவைக்கு வராத நாட்களின் லிஸ்ட்..! போர்க்கொடி தூக்கும் மாணிக்தாகூர் எம்பி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதல் நாள் தவிர எந்த நாட்களிலும் இடம்பெறவில்லை என்று எம்.பி மாணிக்தாகூர் , விஜய் வசந்த் ஆகியோர் மோடியின் வருகை பதிவேட்டுடன் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை நீக்ககோரி கடந்த ஓராண்டாக விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். தொடர்ந்து மத்திர அரசால் விவசாய சங்களுடன் நடத்தபட்ட பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியை தழுவின. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திரமோடி மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்ற முதல் நாள் கூட்ட தொடரிலே மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நவம்பர் 29 ஆம் தேதி கூடிய நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா கொண்டுவரப்பட்டு விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டது. இதனால் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் போராட்டங்களில் ஈடுப்பட்டனர். ஆனால் இரு அவைகளிலும் அமளிக்கு மத்தியிலே விவாதங்களின்றி மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேறியது.
இதனை தொடர்ந்து கடந்த மழைக்கால கூட்டத்தொடரிலே ஒழுங்கின செயலில் ஈடுப்பட்டதாக காங்கிரஸ், திர்ணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 12 எம்.பிகள் சஸ்பெண்ட செய்யப்பட்டனர். அவர்களது சஸ்பெண்ட் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலும் தொடரும் என்று அறிவிப்பு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. 12 எம்.பி சஸ்பெண்ட ரத்து செய்யக்கோரி எதிர்கட்சியினர் தினமும் அவைகளில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் லக்கீம்பூர் வன்முறையில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. இவ்வாறு நாள்தோறும் அவையில் கூச்சலும் குழப்பமும் நீடித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நாள் தவிர எந்த நாட்களிலும் இடம்பெறவில்லை என்று எம்.பி மாணிக்தாகூர் , விஜய் வசந்த் ஆகியோர் மோடியின் வருகை பதிவேட்டுடன் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல் கூட்டத்தொடர் தவிர்த்து இன்று வரை மக்களைவில் பிரதமர் நரேந்திர மோடி எந்த கூட்டத்தொடரிலும் பங்கேற்கவில்லை என்றும் ஒரு புகைப்படத்துடன் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் , ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நாடாளுமன்றத்தில் தலைவர் இருப்பது அவசியம் எனவும் கூட்டத்தொடரில் நடைபெறும் விவாதங்களை ஆக்கபூர்வமான முறையில் உறுதி செய்ய இவை வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு இப்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இன்று எதிர்கட்சியினர் கடும் அமளிக்கு மத்தியில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் மனைவி என்ற வார்த்தைக்குப் பதில் வாழ்க்கை துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் தேர்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நியாயமாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டம் கொண்டுவரப்படுகிறதாக கூறினார். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எழுந்த அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும்படி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தன.