சபரிமலை விவகாரத்தை தொடர்ந்து பகவத் கீதை குறித்து தவறாக பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதி அதற்கு அதிரடி விளக்கமும் அளித்துள்ளார்.
சபரிமலை விவகாரத்தை தொடர்ந்து பகவத் கீதை குறித்து தவறாக பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதி அதற்கு அதிரடி விளக்கமும் அளித்துள்ளார்.

முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி சமூக அவலங்களுக்கு எதிராகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், சபரிமலைப் பிரச்னையில், 'மாதவிலக்கு துய்மையான ஒன்றுதான், அதனால், இந்த பிரச்னையில் நான் முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன்' எனத் தெரிவித்தார். இது சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என போராடி வரும் பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை கிளப்பியது. 
அடுத்து 'காதல் திருமணம் செய்வதன் மூலம் ஜாதியை ஒழிக்க முடியும்' எனக் கூறி அடுத்த பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் "பகவத் கீதை ஒன்றும் புனித நூல் அல்ல. இன்றைய சீரழிவுக்கு இது போன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம்" என அவர் கூறியதாக செய்தி சமூக வலைதளங்களில் பரவி இந்து மதத்தினரை கொதிப்பில் ஆழ்த்தியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் சேதுபதி "என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல. எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும், ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் விஜய்சேதுபதிக்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
