குஜராத்தில் முட்டி மோதும் விஜய் ரூபானி – நிதின் பட்டேல்…. பாஜக ஆட்சி கவிழுமா ?
பாஜக தங்களை மதிக்கவில்லை என்றால் அக்கட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், சுயமரியாதைதான் முக்கியம் என்றும் அதிருப்தியில் இருக்கும் குஜராத் துணை முதலமைச்சர் நிதின் பட்டேலுக்கு ஹார்த்திக் பட்டேல் அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. காங்கிரஸ் கட்சி 79 இடங்களில் வெற்றி பெற்றது.
மோடியும், ராகுல் காந்தியும் போடி போட்டுக் கொண்ட தேர்தல் பிரச்சாரம் செய்தனர். 22 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பாஜகவை எப்படியாவது இறக்கிவிட வேண்டும் என்று வியூகம் வகுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி , அம்மாநிலத்தில் உள்ள பட்டேல் இனத்தின் இளம் தலைவர் ஹர்திதிக் பட்டேலுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனாலும் பாஜக வே வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 22–ந்தேதி நடந்தது. இதில் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் மாநில கவர்னர் ஓ.பி.கோலியை சந்தித்த பா.ஜனதா தலைவர்கள், மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதை ஏற்று, புதிய அரசை அமைக்குமாறு கவர்னரும் அழைப்பு விடுத்தார். அதன்படி குஜராத்தில் புதிய அரசு பதவி ஏற்றது.
இந்நிலையில் கடந்த ஆட்சியில் தன்னிடம் இருந்த நிதித்துறை தற்போது பறிக்கப்பட்டதால் துணை முதலமைச்சர் பதவியை நிதின் பட்டேல் ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதித்துறை பறிக்கப்பட்டதை நிதின் பட்டேல் அவமானமாக கருதுவதாகவும், நேற்று நடைபெற்ற அமைச்சரவை பொறுப்பேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அரசு வாகனம் மற்றும் பாதுகாவலர்களையும் நிதின் பட்டேல் ஏற்க மறுத்துவிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய படேல் இன தலைவர் ஹார்திக் படேல் பாஜக மதிக்கவில்லை என்றால் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல் கட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என தெரிவித்தார்.
நிதின் பட்டேலுடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் வெளியே வர தயாராக உள்ளதாகவும், அவர் நல்ல நிலைப்பட்டை பெற காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் ஹர்த்திக் பட்டேல் தெரிவித்தார்.