உள்ளாட்சித் தேர்தலில் கெத்து காட்டிய விஜய் மக்கள் இயக்கம்.. விஜய்யை அரசியலுக்கு வரவேற்கும் திருமாவளவன்..!
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு 169 பேர் போட்டியிட்டனர். இவர்களில் 13 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 102 பேர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மொத்தம் 169 பேர் போட்டியிட்டதில் 115 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்த வெற்றியின் மூலம் நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது திருமாவளவன் கூறுகையில், “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அதிமுகவுக்கு வலுவான தலைமை அமையவில்லை. அவர்கள் பாஜகவைச் சார்ந்து இருக்கும்வரை அக்கட்சிக்கு சரிவு தொடரும். சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால், அதை நாம் விமர்சிக்க முடியாது. இதேபோல தலைவர்களின் சமாதிக்கு சசிகலா செல்வதை யாரும் தடுக்க முடியாது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.