Vijay Makkal Iyakkam: விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கையை நிராகரித்த மாநில தேர்தல் ஆணையம்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பொது சின்னமான ஆட்டோ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். பதிவு செய்யப்படாத நிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பிரதிநிதிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்திற்கு பொது சின்னமான ஆட்டோ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே பொது சின்னம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கின் அடிப்படையில் பொது சின்னத்தை பெறுவதற்கான முயற்சிகளை விஜய் மக்கள் இயக்கம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.