பேனரில் விஜய் கத்தியை தூக்கியது போல் அவரது ரசிகர்கள் கத்தியை தூக்குவார்கள்... அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை..!
பிகில் பட போஸ்டரில் விஜய் கையில் கத்தி வைத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்களும் அதையே பயன்படுத்துவார்கள் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய ஒரு 15 நிமிட பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களாக பல ஊடகங்களில் இது குறித்த விவாதங்களும், தலைப்புச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இதில், விஜய் பேசிய முழு பேச்சையும் அனைவரும் கேட்க நேர்ந்தது. விஜய் தன்னுடைய பேச்சில் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியல் எதுவும் பேசவில்லை என்பது நடுநிலையாளர்களுக்கு நன்றாக புரிந்தது. ஆனால், விஜய்யின் பேச்சை உள்ளர்த்தமாக எடுத்துக் கொண்டு பல அரசியல்வாதிகள் தங்களை தான் விஜய் விமர்சனம் செய்ததாக எண்ணி, பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு சில அதிமுக அமைச்சர்களும், பாஜகவினர்களூம் விஜய்யின் பேச்சுக்கு கருத்து கூறிய நிலையில் தற்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் ’’விஜய் போன்றவர்கள் முதலீடு செய்த பணத்தை எடுப்பதற்கும், படத்தை நீண்ட நாட்கள் ஓட்டுவதற்கும் அதிமுகவை விமர்சனம் செய்து வருவதாகவும், ஆனால், அதிமுக அதற்கெல்லாம் அஞ்சாது. எதையும் எதிர்த்து நிற்கும். அஞ்சாது, எதிர்த்து நிற்கும். பிகில் பட போஸ்டரில் விஜய் கையில் கத்தி வைத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்களும் அதையே பயன்படுத்துவார்கள்’’என அவர் தெரிவித்தார்.