நடிகர் சங்கத்தின் தலைவர் யார்? தமிழரா? இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி?
இசைக்கல்லூரி துணை வேந்தர் பிரமிளா குருமூர்த்தி தமிழர்தான் என்றும், துணை வேந்தர்கள் நியமனங்கள் எல்லாம் எந்த விதிமீறல்களும் இல்லாமல் நடைபெற்றன என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவைக்கு வாழ்த்துக்கள் கூறினார். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அரசு மீது புழுதி வாரித் தூற்றக் கூடாது என்றார். குறுகிய கண்ணோட்டத்துடன் எங்கள் மீது பழி சுமத்துவது அபத்தமானது என்றும் அவர் கூறினார்.
இசைக் கல்லூரிக்கான துணை வேந்தர் தேர்வு செய்யப்பட்டது, தேர்வு தகுதியின் அடைப்படையிலேயே நடைபெற்றதாக குறிப்பிட்டார். தேர்வுக்குழு பரிந்துரையின்பேரிலேயே நியமனம் நடந்தது என்றும் இதில் விதி மீறல் இல்லை முறைப்படி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழ்த் திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவராக தற்போது யார் உள்ளார்? அதற்கு பாரதிராஜா பதில் சொல்வாரா? அவர் தமிழகத்தை சேர்ந்தவரா? உங்கள் மீது குற்றம் வைத்துக் கொண்டு அடுத்தவர் மீது குற்றம் கூறக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
துணை வேந்தர்கள் நியமனங்கள் எல்லாம் எந்த விதிமீறல்களும் இல்லாமல் நடைபெற்றன என்றும், இசைக்கல்லூரி துணை வேந்தர் பிரமிளா குருமூர்த்தி தமிழர்தான் என்றும், அவரது தந்தையார் தமிழர், தாயார் கேரளாவைச் சேர்ந்தவர் தான் என்று கூறினார். தேர்தல் குழு முறையாக விண்ணப்பங்களைப் பெற்று திறமையானவர்களைப் பரிந்துரை செய்தது என்றும் ஜெயக்குமார் கூறினார்.