தலைமை நீதிபதி தகுதி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு - சுப்ரீம் கோர்ட்டில் காங். முறையீடு
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள ஏழு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 64 எம்.பி.க்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர்.
பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மாநிலங்களவை தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக வெங்கையா நாயுடு மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தினார். சட்ட அமைச்சக முன்னாள் செயலாளர் பி.கே.மல்கோத்ரா, சட்டசபை முன்னாள் செயலாளர் சஞ்சய் சிங் ஆகியோருடனும் வெங்கையா நாயுடு விவாதித்தார். இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் நோட்டீசை நிராகரிப்பதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி நிராகரிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று அக்கட்சி எம்.பி.க்கள் பிரதாப் சிங் பஜ்வா மற்றும் ஹர்ஷத்ராய் யாஜ்னிக் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி மீதான புகார் என்பதால் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வில் இந்த மனு விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் கபில் சிபில் கோரிக்கை விடுத்தார். அவசர வழக்காக விசாரிக்க கோரி நாளை புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்ய அவருக்கு நீதிபதி செல்லமேஸ்வர் அறிவுறுத்தினார்