பிரதமர் மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு.. பேனர் மீது ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்
பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் உள்ள விளம்பர பேனர் மீது ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை ஆலந்தூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினரும் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியின் சென்னை வருகையை கண்டித்து கருப்பு கொடி காட்ட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சில அமைப்புகளும் திட்டமிட்டிருந்தன.
அதன்படி, பிரதமர் சென்னை விமான நிலையம் வந்த நேரத்தில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில், பாரதிராஜா, ராம், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர் சென்னை ஆலந்தூரில் குவிந்து பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள விளம்பர பேனர் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிலர் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து மிக உயரமான விளம்பர பேனர் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.