வேலூரில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்…. உச்சகட்ட பரப்புரை !!
வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 5-ம் தேதி நடக்கவிருப்பதையொட்டி இன்றுடன் அரசியல்கட்சிகளின் பிரசாரம் ஒய்கிறது.
பணப்பட்டுவாடா பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஓட்டு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ம் தேதி நடக்க உள்ளது.
இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கதிர்ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ஏ.சி. சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். கடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்கிறது.
வரும் 5-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
இதையடுத்து மாலை 6 மணி முதல் ஓட்டுப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலம் நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது.