Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததும் வேலையை ஆரம்பித்த வீரமணி...

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு வீடு திரும்பினார். அவரை இரு வாரங்களுக்கு ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் ஓய்வில் இருந்தாலும் சமூகத்தில் நடக்கும் அநியாயத்திற்காக உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

veeramani started his excellent job
Author
Chennai, First Published Jul 15, 2019, 10:43 AM IST

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு வீடு திரும்பினார். அவரை இரு வாரங்களுக்கு ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் ஓய்வில் இருந்தாலும் சமூகத்தில் நடக்கும் அநியாயத்திற்காக உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திராவிட - மொழி - இன உணர்வினை சிதைக்கவும், தமிழ்நாட்டிலும் வடக்கு போல் ஹிந்துத்துவா கொள்கையைத் திணிக்க ஆர்எஸ்எஸ். - பிஜேபி , பின்வாசல் மூலம் நுழைந்து விடும் தொடர் பணி நடக்கிறது. இதை அனைவரும் ஒன்று திரண்டு - ஆபத்தினைப் புரிந்து கொள்வீர்! என  கி. வீரமணி கோரியுள்ளார்.

ஐதுறூறித்து பெரியார் மண்ணை - திராவிடத்தை -  சமுகநீதி - மதச் சார்பின்மை - சமதர்மம் - மொழி - இன உணர்வினை சிதைக்க ஆர்.எஸ்.எஸ். - பிஜேபி தமிழ்நாட்டிலும் வடக்குபோல் ஹிந்துத்துவா கொள்கையைத்  திணிக்க - தந்திரமான சில முறைகளை - படிப்படியாக நுழைத்து - எதிர்த்து வெற்றி பெற முடியாததால் - இப்படி ஒரு தந்திர முறையைக் கையாளுகிறது.

இதை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் படிக்காத பாமர மக்களுக்கும் சரி, படித்த பரமர மக்களுக்கும் சரி புரியாது, புரியவே புரியாது.

தமிழ்நாட்டில் காலூன்ற....

ஒட்டகம் கூடாரத்திற்குள் உள்ளே நுழைவது எப்படி லாவகமாக நடைபெறுமோ அப்படியே - இங்கே உள்ள திராவிடக் கொள்கை முத்திரை உடைய ஆட்சியையும் மிரட்டி பணிய வைப்பதோடு, சில மறைமுக துவக்கங்களை ஒத்திகைகளாகப் பார்த்து, தமிழ்நாட்டில் காலூன்றிட, சில வியூகங்களை வகுத்து மத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.க. ஆட்சி கட்சிகள் இரண்டும் இதனைச் செய்யத் துவங்கி விட்டன!

'நீட்' தேர்வு விலக்குக்கு சட்டத்தில் ...

எடுத்துக்காட்டாக -

(1) 'நீட்' தேர்வு என்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்குள்ள வாய்ப்பையும் - கிராமப்புற ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இருபால் மாணவர்கள் 500க்கு 490 வாங்கினாலும் மாநிலக் கல்வி முறையில் பயில்வதைப் பலவீனப்படுத்தி, மத்திய கல்வி முறையான சி.பி.எஸ்.இ. (CBSE) முறையில் படித்தவர்களே 'நீட்'டில் இடம் பிடிக்கும் வகையில் கேள்வித்தாள் முழுவதுமான நிலை. அந்தக் கல்வித் திட்டத்தில் பயின்றவர்களே விடை அளிக்க முடியும் என்று அமைக்கப்பட்டுள்ளதால் அரியலூர் அனிதா, செஞ்சி பிரதீபா, திருச்சி சுபசிறீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, திருப்பூர் ரிதுசிறீ,  விழுப்புரம் - மரக்காணம் மோனிஷா போன்ற மாணவிகளையும், பெற்றோர்களையும் உயிர்ப் பலி வாங்கி விட்டது! 'நீட்' தேர்வு விலக்குக்கு சட்டத்தில் இடமிருக்கிறது என்பதற்கு உதாரணம் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது ஓராண்டு தள்ளி வைக்கவில்லையா?

ஒருமித்து நிறைவேற்றிய மசோதா

அடுத்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு விலக்குக் கோருவது சம்பந்தமான மசோதாவை ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி அனைவரும் ஒருமித்து நிறைவேற்றியதோடு, குடியரசுத் தலைவர் அதற்கு  ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் - இருந்து தொடரும் கொடுமை!

இதில் ஒத்து நின்று மசோதாவை நிறைவேற்றியவர் களையும் அரசியல் ரீதியாகப் பிரித்து  - பரஸ்பரம் குற்றம் சுமத்துவதன் மூலம் அவர்களைப் பிரித்தாளும் வகையில் செய்தார்கள். தேர்தல் நேரத்தில் பியூஷ் கோயல் என்ற மத்திய அமைச்சர் "நீட்" தேர்வு விலக்கையே தமிழ்நாடு அரசு வற்புறுத்தவில்லையே - மொழி பெயர்ப்பு கேள்வித்தாள் தான் கேட்டார்கள்" என்று கூறினார்.

பிற மாநிலத்தவரின் ஆக்கிரமிப்புக்கே.....

"கிராமப்புற மாணவர்களுக்கு வசதியாக ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொடுங்கள்" என்று நிர்மலா சீதாராமன் - அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கூறி இப்படி திசைத் திருப்பும் வேலையும் நடைபெற்றது. தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில்தான் இரட்டை இலக்க "சூப்பர் ஸ்பெஷாலிட்டி" கல்வி வாய்ப்புகள் உண்டு. அவையெல்லாம் பிற மாநிலத்தவரின் ஆக்கிரமிப்புக்கே ஆளாக்கப்பட்டுள்ளன.

இதில் என்ன கொடுமை என்றால் இந்தியா முழுவதும் இந்த வகையில் 350 இடங்கள் என்றால் தமிழ்நாட்டில் மட்டும் 189 இடங்கள். 10 மாநிலங்களில் ஒரு இடம் கூடக் கிடையாது. நிலைமை என்ன? இந்த 189 இடங்களும் அகில இந்திய தொகுப்புக்குத் தூக்கிச் செல்லப்படுகிறது. கடந்த  ஆண்டில் ஓரிடம் கூடத் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?

முந்தைய ஆண்டு மாணவர்களும் - பல லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து கார்ப்பரேட் கம்பெனி பயிற்சி வகுப்பில் படித்துக் கரை சேர்ந்தவர்களுக்கே 'நீட்' வெற்றி என்பது உறுதியாகிவிட்டது.

இந்தி பின் வாசல் மூலம் நுழையும் தொடர்  பணி

ஆக தமிழ்நாட்டுக் கல்வித் திட்டம் ஒரு "அரோகரா!" மெல்லக் கொல்லும் நஞ்சு - தனியார் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றி, அதில் ஹிந்தி, சமஸ்கிருதம், இத்தனை நாள்களாக எதை முன் வாசலில் கொண்டு வர முடியவில்லையோ, அதைப் பின்வாசல் மூலம் நுழைத்து விடும் தொடர் பணி நடக்கிறது!

2. தமிழ்நாட்டில் சமுகநீதி, மொழித் திணிப்புக்கு எதிர்ப்பு என்பது போன்ற விஷயங்களில் கவனமாக  - விழிப்பாக இருக்கும் மக்கள் பலருக்கும், பக்திப் போதை மருந்தைக் கொடுக்க ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. முன்பே தனிக் கவனம் காட்ட ஆரம்பித்தது.

ஒடுக்கப்பட்ட மக்களை விலைக்கு வாங்கி...

ஹிந்துத்துவா திணிப்புக்கு ஏதுவாக எங்கெல்லாம் கோவில் திருவிழாக்களோ, அங்கு வலுவில் நுழைந்து வம்பு, சண்டை தூண்டுதல், காவிக் கொடிகளைக் கட்டி வரும் பக்தர்கள் எல்லாம் தங்களுக்கென்று  ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துவது - முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஆறுகளில் புஷ்கரணி கொண்டாடுதல், பிள்ளையார் சிலைகளை - வெறும் சாதாரணமாக நடந்திடும் அந்நிகழ்ச்சியை அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரை விலைக்கு வாங்கி - அவர்களுக்குக் காசு - பணம் - கையூட்டு தந்து - ஒரு பிள்ளையார் சிலைக்கு இவ்வளவு தொகை என்று கொடுத்து, அதனைப்  பெரும் ஆடம்பரப்படுத்தினார்கள்.

கேரளத்தில் சபரிமலை அய்யப்பன்கோவிலில் பெண்கள் வழிபடுவதை உச்சநீதிமன்றம் அனுமதித்தது - அதனை எதிர்த்து வாக்கு வங்கியை வலுப்படுத்த முயற்சி செய்தனர். (அதில் தோல்வியே கண்டனர்!)

பொம்மை விளையாட்டுப் பக்தி

பகுத்தறிவாளர்களை ஹிந்து விரோதிகள் என்று முத்திரை குத்தி, ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்க நினைத்து, நடைபெற்ற தேர்தலில் மூக்குடைப்பட்டு, படுதோல்வியை - தமிழ்நாட்டில் பெற்றதால் - இப்போது 40 ஆண்டுகள் தண்ணீரில் கிடந்த அத்திவரதரைத் தேடி - திருவிழா பொம்மை விளையாட்டுப் பக்தி!   (இனி இதுபோல புதுப்புது இறக்குமதிகள் நிறைய வரும் - ஏமாற்றும் நினைப்புடன்!), இதற்கு தொலைக்காட்சி, ஊடகங்களில் தினமும் விளம்பரம். குடிஅரசுத் தலைவர், பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்களை - ஏன் இங்குள்ள பக்திப் போதையாளர்களையும் இந்த வலையில் சிக்க வைத்துள்ளனரே - (அவர்கள்அறிய மாட்டார்கள் - இது எவ்வளவு ஆபத்தில் முடியும் என்பதை) இது திட்டமிட்ட ஏற்பாடேயாகும்.

ஹிந்துத்துவா வெறி பசுவதைத் தடை சட்டம் இங்கே கிடையாது. மாட்டுக் கறி விற்பதற்கோ, உண்பதற்கோ எத்தடையும் இல்லாத தமிழ்நாட்டில் - நாகையில் முதல் ஒத்திகையாக  பொரவச்சேரியில் ஒரு இஸ்லாமியரை அவர் மாட்டுக்கறி உண்டார் என்பதற்காக  வெறிக் கும்பல் ஒன்று தாக்கியிருக்கிறது. காவல்துறையினர் ஒன்றும் செய்யாது என்று கருதி! இப்படி - வடமாநிலங்களில் உள்ள பசு பாதுகாப்பாளர்கள் இங்கே ஒத்திகை பார்க்க முனைந்துள்ளனர்.

அரசும் - காவல்துறையும் வேடிக்கை பார்க்கும் நிலை

தமிழ்நாடு அரசும், முதல்வரும், காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை. பெரும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை கிளம்பி விடும்  - உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும். விஷம் கக்கும் - மதக் கலவரங்களைத் தூண்டி விடவே இந்த வலிய - வம்பு வெறிக் கூத்து! தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் தொடர வேண்டாமா?

பக்தி, திருவிழாக்களை கருவிகளாகக் கொண்டு மதவெறியை,  கலவரங்களைத் தூண்டி  தாங்கள் காலூன்ற முயற்சிக்கின்றனர்.

பிற மாநிலத்தவர்கள் படையெடுப்பு உத்தியோக மண்டலத்தில்.

செம்மொழித் தமிழுக்கு - தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகளில் இடம் இல்லை என்று ஆக்கி தமிழ்நாட்டின் தனித்தன்மையை அழிக்கச் செய்யும் புதிய  தேசிய கல்விக் கொள்கை, உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித பொருளாதார இடஒதுக்கீடு முதலியன அணி வகுத்து நிற்கின்றன!

அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது. எதிர் வந்துள்ள ஆபத்தினைப் புரிந்து கொள்வீர்! என கோரியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios