ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகினார் வீணை காயத்ரி - டி.டி.வி தினகரனிடம் ஐக்கியம்...
ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வீணை காயத்திரி தற்போது டி.டி.வி தினகரனிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாக பிரிந்து வந்தார். அவருக்கு அதிமுகவின் சில எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அதன்படி வீணை காயத்ரியும் ஓ.பி.எஸ்ஸின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும் அப்போது ஏன் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தேன் என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
அவர் பேசுகையில், ஓ.பி.எஸ்தான் ஜெயலலிதாவின் உணமையான விசுவாசி எனவும், ஜெயலிதாவுடன் இருந்தவர்கள் பகட்டு வேஷம் போட்டு அவரை ஏமாற்றி வந்ததை நான் மனதார உணர்ந்தேன் எனவும் தெரிவித்தார். ஆனால் அதை ஜெயலலிதாவிடம் சொல்வதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.
ஜெயலலிதா நல்ல அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதிகாரிகள் அதை செயல்படுத்த முன்வர விலை. நான் துணைவேந்தராக இருந்தபோது, ஓ.பி.எஸ் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு கேடயம் ஒன்று வழங்கினோம். ஆனால் இது ஜெயலலிதாவிற்கு சேர வேண்டியது என வாங்க மறுத்துவிட்டார்.
அம்மாவின் உணமையான விசுவாசி ஓ.பி.எஸ் தான் எனவே அவருக்கு ஆதரவு தருகிறேன் என வீணை காயத்ரி விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வீணை காயத்ரி ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதையடுத்து தினகரன் தரப்பில் இன்னும் பலர் திரும்ப வந்து தாய் கழகத்தில் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.