வேதா இல்லம் இனிமே ஜெயலலிதா நினைவு இல்லம்... அவசர சட்டம் பிறப்பித்த தமிழக அரசு..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறையால் 2016ம் ஆண்டு மறைந்தார். அவர் வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஏற்கனவே அரசாணை 2017ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பிறப்பித்திருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. சமீபத்தில் ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவிடமாக மாற்றம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற ஆளுநரின் ஒப்புதலுடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின்மூலம், புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைத்து பணிகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகின்றன.
மேலும், ஜெயலலிதா நினைவில்ல அமைப்பிற்கான தலைவராக முதல்வரும், அமைச்சரும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தையும், அதில் உள்ள பொருட்களையும் பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.