ஓபிஎஸ் - ராமதாஸ் இடையே மோதல்... எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி குளிர்காயும் ப.சிதம்பரம்..!
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தற்காலிகமானதா, நிரந்தரமானதா என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தற்காலிகமானதா, நிரந்தரமானதா என முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தேர்தலுக்காக அதிமுக நடத்தும் நாடாகம் என்று விமர்சனம் செய்தனர். இந்நிலையில், இது குறித்து பிரசாரத்தில் பேசி வரும் அதிமுக அமைச்சர்கள் வெவ்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இந்த சட்டம் தற்காலிகமானது எனக்கூறினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். இதனை முதல்வர் தெளிவுப்படுத்தியுள்ளார் என அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதலமைச்சர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை. இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு!
முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.