உடைக்கப்பட வேண்டியது சிலை அல்ல; ஹெ.ராஜாவின் எண்ணம்...! வைரமுத்து தாக்கு...!
பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும் எனவும் பெரியார் சிலையில் கை வைத்தால் தேனீக்கூட்டில் கைவைத்த கதையாகிவிடும் எனவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவிடம் வீழ்ந்தது. இந்த நிலையில் பாஜக தொண்டர்கள் அங்குள்ள லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர்.
இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது பேஸ்புக் பக்கத்தில், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை... தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா. சிலை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும் எனவும் பெரியார் சிலையில் கை வைத்தால் தேனீக்கூட்டில் கைவைத்த கதையாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.