"நதிநீர் பிரச்சனைக்காக ஜெயலலிதாவை போல் எந்த முதல்வரும் போராடியதில்லை" - வைகோ புகழாரம்!!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முல்லைப்பெரியாறு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் போன்றவை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நல்ல தீர்ப்பை பெற்றுத்தந்தார் என்றும் , அவரைப்போல தமிழகத்தின் நதிநீர் உரிமைகளுக்காக போராடிய முதலமைச்சர் யாருமில்லை என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8-ந்தேதிகளில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக அமைச்சர் அனந்தகுமார் தலைமையில் சதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அதில் மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக சுற்றுச்சூழல் சான்றிதழ் தரமாட்டோம் என்றும் ஆனால் நீங்கள் அணையை கட்டிக்கொள்ளுங்கள் என்று அனந்த குமார் , கர்நாடக முதலமைச்சரிடம் கூறியதாக வைகோ தெரிவித்தார்.
மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அணை கட்டுவதை ஏன் தடுக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உங்களுக்கு தேவையான தண்ணீரை மட்டும் கேளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்காமல் தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்துள்ளார் என்றும் இந்த விஷயத்தில் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டு குற்றவாளிகள் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்..
முல்லைப்பெரியாறு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் போன்றவை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, நல்ல தீர்ப்பை பெற்றுத்தந்தார் என்றும் , அவரைப்போல தமிழகத்தின் நதிநீர் உரிமைகளுக்காக போராடிய முதலமைச்சர் யாருமில்லை என்றும் வைகோ தெரிவித்தார்