vaiko emotional speech for neet exam

வைகோவின் கண்டன அறிக்கை ஒன்று தாயகத்திலிருந்து தவழ்ந்து வந்து விழுந்திருக்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதில் தலைவர் குமுறிக் கொட்டியிருக்கும் விஷயங்களில் ஹைலைட்டானவை இதுதான்...
“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் தமிழக மாணவ - மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு கேரள மாநிலத்துக்கும், ராஜஸ்தான் மாநிலத்துக்கும் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு சென்னை உயர்நீதிமன்றக் கிளை தடைவிதித்த போது, மத்திய அரசு அதை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகி தடையை நீக்கியது. இதனால் 5600 மாணவ - மாணவிகள் கேரளத்திலு, ராஜஸ்தானிலும் தேர்வு எழுத சென்று விவரிக்க இயலாத இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். தங்குவதற்கு இடம் கிடைக்காமல், உணவு கிடைக்காமல் அல்லல்பட்டனர். 

இதில் மேலும் அதிர்ச்சி தரத்தக்க செய்தி ஒன்று வந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவன் தன் தந்தை கிருஷ்ணசாமியோடு எர்ணாகுளத்திற்கு சென்று ஏர்லைன்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்து இன்று தேர்வு எழுத சென்றுள்ளார். மன உளைச்சலால் அவரது தந்தை கிருஷ்ணசாமி அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே மாரடைப்பால் உயிர் நீத்தார். 

இந்த செய்தியை அறிந்தவுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களோடு நான் தொடர்பு கொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்காததால் கேரளா ஆளுநர் மாண்புமிகு சதாசிவம் அவர்களுக்கு தகவல் தந்தேன். ஆளுநர் உடனே ஆவன செய்வதாக கூறினார். எர்ணாகுளம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆளுநர் தகவல் தந்து, அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். 

எர்ணாகுளத்திலுள்ள என் நண்பர்களிடம் கூறி, அம்மாணவனுக்கு தேறுதல் கூறி, அவரது தந்தையின் சடலைத்தை ஊருக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டுள்ளேன். 
தமிழக மாணவ - மாணவிகள் சொந்த நாடு என்று சொல்லப்படும் இந்தியாவிலேயே அகதிகளாக, அநாதைகளாக மத்திய அரசால் ஆக்கப்படுகிறார்களா? என்ற கேள்விதான் எழுகிறது. 

தமிழக மாணவிகள் நீட் தேர்வு மையங்களுக்கு சென்ற போது, சோதனை என்ற பெயரால் அவர்களது மேலாடைகளையும் சோதனையிடுகிறோம் என்று அலங்கோலப்படுத்திய அக்கிரமம் சகிக்க முடியாதது, மன்னிக்க முடியாதது.” என்று கொதித்துள்ளார். 
- விஷ்ணு பிரியா