தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். சைதாப்பேட்டை கிளைச் சிறை வெளிநாட்டினர் அடைக்கப்படுவதற்கு அறிவிக்கப்பட்ட சிறை அல்ல. இது தமிழக அரசின் முதல் விதிமீறல். 

 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் விதிகளை மீறி சிறையில் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில், உத்தரப்பிரதேசத்தில்கூட தமிழகத்தில் எடப்பாடி அரசு செய்த அராஜகம் நடைபெறவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்.


இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட இஸ்லாமியர்களில் பலர் திரும்பிச் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். சைதாப்பேட்டை கிளைச் சிறை வெளிநாட்டினர் அடைக்கப்படுவதற்கு அறிவிக்கப்பட்ட சிறை அல்ல. இது தமிழக அரசின் முதல் விதிமீறல்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கக் கோரும் 12 வழக்குகளில், கைது செய்யப்பட்ட 98 வெளிநாட்டு தப்லீக் ஜமா அத்தார்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையாளரிடம் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்துவிட்டு, சென்னை மாநகருக்குள் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், சொந்தப் பிணையில் இவர்களை விடுவிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டன. ஆனால், இவ்வாறு பிணை வழங்கப்பட்டவர்கள் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலிருந்து மீண்டும் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 
தடுப்பு அல்லது சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை உள்ளடக்கிய அறிவிக்கையை 2019 ஜனவரி 9ல் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளில், சிறப்பு முகாம்கள் சிறை வளாகத்திற்குள் அமைந்திருக்கக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு தனி சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. ஆனால் பிணையில் விடுவிக்கப்பட்ட வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு, புழல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு வழங்கப்படுகிறது.
இந்த அறிவிக்கையில், இப்படிப்பட்டவர்களுக்குப் போதுமான இடவசதியும், காற்று, வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அங்கு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் வழிகாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் 40 நபர்கள் தங்கக்கூடிய இடத்தில் 12 பெண்கள் உட்பட 129 நபர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள். சுருக்கமாக தடுப்பு அல்லது சிறப்பு முகாம்களுக்கு மத்திய அரசு வகுத்துள்ள அனைத்து வழிமுறைகளை எல்லாம் மீறும் வகையில் கடந்த 64 நாட்களுக்கு மேலாக வெளிநாட்டு முஸ்லிம்கள் புழல் சிறை வளாகத்திற்குள் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள்.