தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழகமே தயாராக உள்ளது.. ஆனால் தடுப்பூசிதான் இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை.!
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 90,000 தடுப்பூசிகள் போடப்பட்டு சேப்பாக்கம் முதலிடத்தில் உள்ளது. ஆகையால், மத்திய அரசு விரைந்து தடுப்பூசி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்றுடன் காலியாகிவிடும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் தடுப்பூசி முகாமை தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார். இதில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் இல்லை என்பது வருத்தமானது. தமிழகத்தில் 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. மதியத்திற்கு மேல் தட்டுப்பாடுதான். தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 90,000 தடுப்பூசிகள் போடப்பட்டு சேப்பாக்கம் முதலிடத்தில் உள்ளது. ஆகையால், மத்திய அரசு விரைந்து தடுப்பூசி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு இதுவரை வந்த 1.44 கோடி தடுப்பூசி டோஸ்களில் 1.41 கோடி டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் சென்னையில் 45 இடங்களில் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 19 இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 5 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.