யாரையும் கேட்காமல் செய்வீர்களா..? கலர் கலரா கதை விட்டு விற்கிறீர்களா..? பாஜகவை கேள்வியால் துளைக்கும் உதயநிதி.!
கலர்கலராக கதை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கல்வியில் முதலீடு செய்யலாம் என புதிய கல்விக்கொள்கையில் கூறியிருப்பது ஏன்?
யாரையும் கலந்தாலோசிக்காமல் பாஜக கொள்கைகளை எல்லாம் வலியக் கோத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில், சில மாற்றங்களை கொண்டு வந்து, மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 அறிவித்துள்ளது. தமிழகம் கடுமையாக எதிர்த்த மும்மொழிக் கொள்கை திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி. கனிமொழி, அன்புமணி எம்.பி. உள்ளிட்டோர் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’புதிய கல்விக்கொள்கை என்பதன் மூலம் மாநில உரிமைகள், சமூக நீதி போன்றவற்றின் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்தியுள்ளது மத்திய அரசு. யாரையும் கலந்தாலோசிக்காமல் பாஜக கொள்கைகளை எல்லாம் வலியக் கோத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஆத்ம நிர்பார், தற்சார்பு என்றெல்லாம் கலர்கலராக கதை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கல்வியில் முதலீடு செய்யலாம் என புதிய கல்விக்கொள்கையில் கூறியிருப்பது ஏன்? இந்தியாவை உலக கார்ப்பரேட்களின் கல்விச்சந்தையாக்கி தனியாருக்குத் திறந்துவிடும் இந்த நோக்கம் கண்டிக்கத்தக்கது.
மொத்தத்தில் புதிய கல்விக்கொள்கை என்பது சமூக நீதி, மாநில உரிமை, கிராமப்புற மாணவர்கள் நலனைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, தனியார்மயம், ஒரே நாடு-ஒரே கல்வி, சமஸ்கிருதம் என ஆதிகால ஏற்றத்தாழ்வுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடாகவே உள்ளது. இதனை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்