நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. பலத்தைக் காட்ட திட்டமிடும் கமல்.. களத்தில் குதித்த நிர்வாகிகள்..!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சோபிக்காத நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சோபிக்கவில்லை. அக்கட்சி பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் சற்று ஆதரவை மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்ததால், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சி ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் இத்தேர்தலுக்குத் தயாராகுமாறு கட்சியின் மாநில செயலாளர்களுக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, கட்சியின் நிர்வாகிகளும் அந்தப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்த பயன்படுத்திக் கொண்டோம். ஆனால், நகர்ப்புறங்களில் எங்கள் கட்சிக்கு வாக்கு வங்கி உள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் கணிசமான இடங்களில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று தலைவர் விரும்புகிறார். எனவே, இப்போதிருந்தே பணிகளைத் தொடங்கும்படி தலைவர் கமல் உத்தரவிட்டுள்ளார்” என்று அந்த நிர்வாகி தெரிவித்தார்.