இனி இரவு 8 மணி வரைதான் மதுக் கடைகள் திறந்திருக்கும் !! முதலமைச்சர் அதிரடி உத்தரவு !!
ராஜஸ்தானில் இனி இரவு 8 மணி வரை தான் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்றும் அதற்கு மேல் மது விற்பனைக்குத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியேற்றுக் கொண்டார்.
அவர் முதலமைச்சரானவுடன் உடனடியாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பல புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் மாநிலத்தில் மது விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு மது பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ராஜஸ்தானில் இரவு 8 மணிக்கு மேல் மது விற்பனை செய்யக்கூடாது என்று முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் உத்தரவை மீறி செயல்படும் பார்கள் மற்றும் விடுதிகள் மூடி சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற ஒரு உத்தரவு 2008ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டதாகவும், அது ராஜஸ்தான் மாநிலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும் தெரிவித்த அசோக் கெலாட், அதுபோன்று இந்த உத்தரவையும் சரியாக பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதே போல் விலை அதிகமாகவும், போலி மது வகைகளும் விற்பது தெரியவந்தால் சட்ட ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார்.