வரப்போகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளை தவிர்த்து, தனித்து போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒரு மாநகராட்சியையும் ஒதுக்குவதில்லை என்கிற முடிவில் இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

2011 இல் ஜெயலலிதா எடுத்த பிளானை இப்போது நாமும் செயல்படுத்தலாம் என்று முடிவு செய்துள்ளார் ஸ்டாலின் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தலை மனதில் வைத்தும், ஆளும் கட்சியில் இருந்து மேயர் இருந்தால் அரசின் திட்டங்களை எளிதாக செயல்படுத்த முடியும் என்பதாலும் மாநகராட்சிகளை கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஒதுக்க வாய்ப்பே இல்லை என்று தகவல்கள் வருகின்றன.

எதிர்க்கட்சியை ஒன்றும் இல்லாமல், ஆக்க இதுவும் ஒரு நல்ல ஸ்கெட்ச் என்பதால், முதல்வர் இந்த முடிவில் இருக்கிறார் என்று திமுக வட்டாரங்கள் கூறுகிறது. அரசின் திட்டங்களை மாநகராட்சிகளில் சிறப்பாக செயல்படுத்த மேயர்கள் அவசியம். அவர் நம்ம கட்சியாக இருந்தால் எளிமையாக இருக்கும். கூட்டணி கட்சியாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சென்று பேச வேண்டியதாக இருக்கும். 

இது திட்டங்களை தாமதப்படுத்தும் என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு மாநகராட்சி பதவிகளை திமுக ஒதுக்க வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வருகின்றன. இதை பற்றி திமுக நிர்வாகிகள் சிலர் கூட்டணி கட்சிகளிடம் பேசி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மிகக் குறைவான இடங்களையே ஒதுக்கீடு செய்தது. 

இதனால், கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என்று கடுமையாக திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். திமுக தலைமையின் இந்த முடிவு, கூட்டணிக்கட்சியினரை வருத்தத்தில் உள்ளாக்கி இருக்கிறது. மேலும், கூட்டணி கட்சியினருக்காக ‘சீட்’களை ஒதுக்குவாரா என்ற கேள்வி ? தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.