மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்கிய வெங்கையா நாயுடு: முதல்வர் பதவியில் எடப்பாடி இன்னும் நீடிப்பதா?
ஒரு மத்திய அமைச்சர், மாநில தலைமை செயலகத்திற்கு வந்து, முதல்வரையும், அதிகாரிகளையும் ஆட்டிப்படைத்த நிகழ்வு, இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் நடந்திருக்கும் என்று தோன்றுகிறது.
ஜெயலலிதா என்கிற ஒரு ஆளுமை இருந்திருந்தால், எந்த மத்திய அமைச்சருக்காவது, இப்படி ஒரு தைரியம் வந்திருக்குமா?. இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை.
இப்படி ஒரு நிகழ்வுக்கு இடம் கொடுத்த எடப்பாடி, முதல்வர் பதவியில் இன்னும் நீடிக்க வேண்டுமா? என்ற கேள்விதான் எழுகிறது.
கடந்த 14 ம் தேதி, மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, அப்படியே தலைமை செயலகத்திற்கும் வந்துள்ளார். அவருடன் முதல்வர் எடப்பாடியும் வந்துள்ளார்.
அங்கு, மக்கள் நல திட்டங்களுக்காக, மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து, அதற்கான புள்ளி விவரங்களை கொடுத்து இருக்கிறார் நாயுடு.
அதற்கு, விளக்கம் அளிக்கும் வகையில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கொடுத்த புள்ளி விவரத்தையும் ஒப்பிட்டு, நான் கொடுத்ததற்கு, இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை என்று கூறி, குரலை சற்று உயர்த்தியும் இருக்கிறார் வெங்கையா நாயுடு.
அதற்கு பின்னர், முதல்வர் எடப்பாடியுடன் தனியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார் நாயுடு. அதை தொடர்ந்துதான், முதல்வர் டென்ஷனாகவே காணப்படுகிறார் என்கிறது கோட்டை வட்டாரம்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தலைமை செயலகத்திற்கு வந்து, தமிழக அரசின் நல திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தது, மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை என்றே அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அரசின் திட்டங்கள் பற்றி மட்டும் ஆய்வு செய்திருந்தால், கண்டிப்பாக எதிர்ப்பு காட்டி இருக்கலாம். ஆனால், அதிமுகவுக்கு நிதி ஆதாரங்கள் குறித்தும் அவர் எழுப்பிய கேள்வியால், முதல்வர் மட்டுமல்ல, அமைச்சர்கள் பலரும் ஆட்டம் கண்டிருக்கின்றனர் என்றே கோட்டை வட்டாரம் கூறுகிறது.
அங்கே, இங்கே கையை வைத்து, இப்போது அதிமுகவின் அடி மடியிலேயே கை வைத்திருக்கிறது பாஜக, இது எங்கே போய் முடியுமோ? என்று அச்சம் தெரிவிக்கின்றனர் அமைச்சர்கள்.
மத்திய அரசின் ஆதரவை பெற்றவர் பன்னீரா? எடப்பாடியா? என்று பட்டிமன்றம் நடத்துவதற்கு முன்னர், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தலைமை செயலகத்தில் நடத்திய ஆய்வு, மாநில சுயாட்சி தத்துவத்திற்கு பங்கம் விளைவித்துள்ளது என்றே கலங்குகிறது கோட்டை வட்டாரம்.