சென்னை வந்த அமித்ஷா... போட்டிபோட்டுக்கொண்டு வரவேற்ற முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள்..!
சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ளது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பதில் பாஜக தலைமை உறுதியாக உள்ளது. இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, அங்கிருந்து காரில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார். வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.