“தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், பிச்சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சபைக்  கூட்டத்தில் பேசிய ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி  ஒருத்தரையும் விட்டுவைக்காமல் கிழி கிழி என கிழித்தெறிந்து விட்டார்.

உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் நடக்கும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வார் என அறிவித்திருந்த நிலையில் இன்று காலை ஆண்டிப்பட்டியில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்திற்கு வந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் விட்டு 100 நாள் வேலையில் மோசடி, பெண்களுக்கு கழிப்பறை இல்லை, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், படித்தவர்களுக்கு வேலை வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி; தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது திமுக ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும். கல்விக் கடனை ரத்து செய்வதோடு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும். குடி தண்ணீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை, கல்யாண மண்டபம் ஆகியவை கட்டிக் கொடுக்கப்படும் என்றார்.

 அதுமட்டுமல்ல, முல்லைப் பெரியாறு தண்ணீரை இப்பகுதிக்கு கொண்டு வரவும், சக்கிலிச்சி அம்மன் கண்மாய்க்கு குன்னூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடிமகன் பேரிலும் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் போடப்படும் என்று சொன்னார். ஆனால் அதை அவர் சுருட்டிக்கொண்டு உலகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அடிமைகளாக ஓ.பி.எஸ், இ பி எஸ், தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டுள்ளார்கள்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சாவில் இருக்கும் மர்மத்தையே கண்டு பிடிக்க முடியாத எடப்பாடி , பன்னீர்செல்வம் அரசு மக்களை பற்றி சிந்திக்கவா போகிறது, என்று பேசினார்.