தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், அத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்துவார் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதல் நினைவு நாள் அடுத்த மாதம் 7-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதில் உதயநிதி ஸ்டாலினை பங்கேற்பார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட கையோடு, அவரை வைத்து மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலிடனுக்கு பிறகு மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என்று திமுக முன்னணியினர் வலியுறுத்திவந்தனர். அதன்படி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து பொதுச்செயலாளர் க. அன்பழகன் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


திமுகவின் அடுத்த தலைவராக உதயநிதியை தயார் செய்யும் வகையில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதயநிதியை வாழ்த்துவதற்காக பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் நேற்று சென்னைக்கு வந்திருந்தனர். அப்போது இதுகுறித்து திமுக தலைமை உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.