திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்... பதவி வழங்க நாள் குறித்துவிட்டதாக தகவல்!
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, உதயநிதிக்கு இளைஞரணி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்னணியினர் வைக்கத் தொடங்கினர்.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்னும் சில தினங்களில் நியமிக்கப்படுவார் என திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக இளைஞரணி செயலாளராக பல ஆண்டுகளாக இருந்துவந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவரான பிறகு அந்தப் பதவியை துறந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, உதயநிதிக்கு இளைஞரணி பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்னணியினர் வைக்கத் தொடங்கினர்.
திருச்சி, நாமக்கல் மாவட்ட திமுகவினர் இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பிவைத்தார்கள். அதற்கேற்க இளைஞரணி செயலாளர் பதவியிலிருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், ஒரு மாதம் கழித்து இளைஞரணி செயலாளர் பதவிலிருந்து தான் ராஜினாமா செய்யவில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக நியமிக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக நேற்று இரவு தகவல்கள் வெளியாயின. இதனால், திமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “இன்னும் சில தினங்களில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்படுவார். இந்த விஷயத்தில் திமுக தலைமை ஏற்கனவே முடிவெடுத்துவிட்டது. இதுகுறித்து திமுக முன்னணியினரோடு ஸ்டாலின் ஆலோசனை நடத்திமுடித்துவிட்டார். அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டது.