விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்குகிறாரா உதயநிதி ஸ்டாலின்..?
இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்கத் தயாராகி விட்டார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உதயநிதிக்காக விருப்ப மனுவை கள்ளக்குறிச்சி எம்.பி., பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி அளித்துள்ளார்.
“விக்கிரவாண்டி தொகுதியில் 100 சதவிகிதம் வெற்றி எங்களுக்குத்தான். உதயநிதி அங்கு நின்றால், அது ஒரு ஸ்டார் தொகுதியாக மாறும். தமிழக அளவில் அந்தத் தொகுதி கவனம் பெறும்” என கவுதம சிகாமணி தெரிவித்துள்ளார். திமுக மேடைகளில் கடந்த சில ஆண்டுகளாக வளம் வந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு, சில மாதங்களுக்கு முன்னர் இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
கருணாநிதி உயிரோடு இருந்து, அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தபோது, ஸ்டாலினிடம் இருந்த பொறுப்பு அது. கருணாநிதி, அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு கட்சியின் செயல் தலைவராக பதவியேற்றார் ஸ்டாலின். கருணாநிதி மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைவரானார் ஸ்டாலின். சமீபத்தில்தான் அவர் தலைவராக ஓராண்டை நிறைவு செய்தார். இந்நிலையில் இடைத்தேர்தல், கிராமசபை கூட்டங்கள், மக்களவை தேர்தல்களில் அப்பாவுக்கு உறுதுணையாக களம் இறங்கினார் உதயநிதி.
மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்ததால் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு, கட்சியின் முழுக் கட்டப்பாடு உதயநிதியின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் அவருக்கும், திமுகவில் வலுவான பதவி கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற மறு தேர்தலில் கட்சியின் முக்கிய பேச்சாளர்களைவிட உதயநிதி அதிக இடங்களில் பிரசாரம் செய்தார். தற்போது மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து திமுகவில் பவர்புல்லாக இருக்கும் அவர், இந்த முறை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதால் விக்கரவாண்டி தொகுதியில் களமிறங்கி திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என களமிறங்க முடிவெடுத்துள்ளார்.