இடமாறுதலுக்கு இவ்வளவு, இந்தப் பொறுப்புக்கு அவ்வளவு என கமிஷனில் காட்டும் அக்கறையை, உயிர்காப்பவர்களின் நலனிலும் காட்ட வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரொனா தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்த மருத்துவர்களின் பட்டியலை இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ளது. இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 43 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், “மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல” என அரசை சாடியிருந்தார்.
இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இதுதொடர்பாக அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனாவால் நம் மாநிலத்தில் அதிக மருத்துவர்கள் இறக்கிறார்கள் என நான் சுட்டிக்காட்டியபோது அமைச்சர் விஜயபாஸ்கர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.’அவதூறு கிளப்பிட்டார், வழக்கு போடுவோம்’ என்றும் மிரட்டினார். ஆனால், இன்று இந்திய மருத்துவ கூட்டமைப்பே (IMA) தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் என பெயர், முகவரியோடு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பு சொல்வதும் பொய்யென வழக்குப் போடுவார்களா?
மக்கள் மரணத்தை மறைத்தவர்கள் மருத்துவர்களின் மரணத்தையும் மறைப்பதோடு, தொற்றால் இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் நிவாரணத்தை ரூ.25 லட்சமாகக் குறைத்துள்ளனர். இதுதான் உயிரைப்பணயம் வைத்து கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு அரசு செலுத்தும் மரியாதையா? இது அவர்களுக்கு செய்யும் துரோகமில்லையா? இடமாறுதலுக்கு இவ்வளவு, இந்தப் பொறுப்புக்கு அவ்வளவு என கமிஷனில் காட்டும் அக்கறையை, உயிர்காப்பவர்களின் நலனிலும் காட்ட வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என பலியான முன்கள வீரர்களின் உண்மையான பட்டியலை வெளியிட்டு அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இதுவே திமுகவின் எண்ணம்!” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.