தமிழகத்தில் ஒரு கேடுகெட்ட ஆட்சி... உதயநிதி ஸ்டாலின் தாறுமாறு விமர்சனம்!
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற சந்தேகம் உள்ளது. அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், விசாரணை ஆணையத்தில் அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகவில்லை.
தமிழகத்தில் கேடுகெட்ட ஆட்சி நடைபெறுகிறது என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார். மாம்பழப்பட்டு என்ற இடத்தில் மு.க. ஸ்டாலினை போல திண்ணைப் பிரச்சாரம் உதயநிதி ஈடுபட்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்து பேசினார். “தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற சந்தேகம் உள்ளது. அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், விசாரணை ஆணையத்தில் அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கப்படும் என்று நம் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பதை நினைவுப்படுத்துகிறேன்.
திமுக ஆட்சி நடைபெற்றபோது, விக்கிரவாண்டி பகுதியில் 200 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அதேபோல கால்நடை மருத்துவமனையும் இங்கே அமைத்துத் தரப்பட்டது. கிராமங்களில் எல்லாம் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டன. ஆனால், தற்போதைய அதிமுக ஆட்சியில் விக்கிரவாண்டி பகுதியில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஒரு கேடுகெட்ட ஆட்சி இங்கே நடைபெற்றுகொண்டிருக்கிறது.
முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியின் எடுபிடியாக இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தீர்கள். அதிமுக கூட்டணிக்கு சரியான சவுக்கடி கொடுத்தீர்கள். அதேபோல இந்த இடைத்தேர்தலிலும் அவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.