மோடிக்கு எதிராக உதயநிதி கருப்பு கொடி.. கேஸ் விலையில் இருந்து 100 ரூபாய் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை என தகவல்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் போராடினோம், ஆளுங்கட்சியாக இருக்கும்போது நாங்கள் போராடுகிறோம், இது மக்களுக்கான போராட்டம் என திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
.
எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் போராடினோம், ஆளுங்கட்சியாக இருக்கும்போது நாங்கள் போராடுகிறோம், இது மக்களுக்கான போராட்டம் என திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பாஜகவின் பல்வேறு அறிவிப்புகளையும், நடவடிக்கைகளை எதிர்த்து அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது, அதில் திரு.வி.க சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தாயகம் கவி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை பாலு என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் போராடியது, இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது போராடுகிறது, இந்த போராட்டம் மக்களுக்கானது என்றார். இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது, அதை பாஜக அரசு உடனே கைவிட வேண்டும் என்றார்.
மத்திய பாஜக பாசிச ஆட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இன்று நாடு முழுவதும் போராடி வருகின்றன, வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம், மத்திய அரசு அதை உடனே பரிசீலிக்க வேண்டும் என்றார்.தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஒவ்வொரு அறிவிப்பையும் படிப்படியாக திமுக அரசு நிறைவேற்றி வருகிறது, கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய், பெட்ரோல் மீது 3 ரூபாய் கலால் வரி குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது திமுக அரசு. அதேபோல், கேஸ் விலையில் இருந்து 100 ரூபாய் குறைப்பதற்கான வழியையும் விரைவில் தமிழக அரசு செயல்படுத்தும் என தெரிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.