எல்லாரும் எப்படி இருக்கீங்க...!! - கூர்க்கில் நலம் விசாரிக்கும் டிடிவி...
கர்நாடகாவில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களை சந்திக்க இரண்டு வாரங்களுக்கு பிறகு டிடிவி தினகரன் கூர்க் விடுதிக்கு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 18 பேரை தகுதிநீக்கம் செய்து பேரவைத்தலைவர் ஆணையிட்டார்.
இதைதொடர்ந்து தமிழகத்தில் 18 தொகுதிகள் காலி என தேர்தல் ஆணையத்திற்கு பேரவை செயலாளர் பூபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நீதிமன்றத்தில் முறையிட்டனர். இது தொடர்பான வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
இதனிடையே டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், எம்.எல்.ஏக்கள் விடுதியை காலி செய்யுமாறு டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனால் இன்று டிடிவி எம்.எல்.ஏக்கள் கூர்க் விடுதியில் இருந்து தமிழகம் திரும்புவதாக தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களை சந்திக்க இரண்டு வாரங்களுக்கு பிறகு டிடிவி தினகரன் கூர்க் விடுதிக்கு சென்றுள்ளார்.