அருப்புக்கோட்டை அருகே நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர்களை வரவேற்று தொண்டர்கள் வைத்திருந்த பேனர்களால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவற்றை அகற்றினால் தான் கலந்து கொள்வோம் என பிடிவாதமாக இருந்ததையடுத்து தொண்டர்கள் உடனடியாக பேனர்களை அகற்றினர்.

சென்னை பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தொண்டர்கள் யாரும் வரவேற்பு பேனர்கள் வைக்கக் கூடாது என்று அதிமுக, திமுக, அமமுக, பாமக, விசிக , நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகளும் அறிவிப்புகள் வெளியிட்டன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அம்மா கூட்டுறவு சிறப்பு அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கு வரவேற்பு அளிக்க பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் பேனர்கள் வைத்திருந்தனர். நிகழ்ச்சிக்காக வந்த அமைச்சர்கள், இதனைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அகற்றினால் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்வோம் என்றும் கறாராக கூறிவிட்டு அங்கு கிடந்த சேர்களில் சென்று அமர்ந்துவிட்டனர். இதனையடுத்து, உடனே அங்கிருந்த பேனர்களை ஒவ்வொன்றாக அதிமுகவினர் அகற்றினர். அனைத்து பேனர்களும் அகற்றப்பட்ட பிறகு நிகழ்வில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

பேனர்களை அகற்றினால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் என அமைச்சர்கள் பிடிவாதமாக இருந்து அதனை அகற்ற வைத்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.