Two Leaves Case Hearing adjourned for Nov 06
இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இம்முறை நவம்பர் 6 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 6 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இன்று விசாரணை துவங்கியதும், டிடிவி தினகரன் தரப்பு வழக்குரைஞர் விஜய் ஹன்சாரியா, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார். மதியம் 3 மணிக்குத் துவங்கியது இந்தக் கூட்டம். இதில் இன்று பெரும்பகுதி நேரத்தை டிடிவி தினகரன் தரப்பு வழக்குரைஞரே எடுத்துக் கொண்டார். அப்போது, ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கிட்டனர். ஆனால் அதற்கு தினகரன் தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தேர்தல் ஆணையம் குறுக்கிட்டு, வாதத்தை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு கூறியது.
இருப்பினும், இந்த விசாரணை தொடர்ந்தது என்பதால், உடனே விவாதம் முடிந்து, விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு அளிப்பது இயலாத காரியம் என்பதால், விசாரணையை ஒத்தி வைப்பது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, வரும் நவ.6 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் என்று கூறியது தேர்தல் ஆணையம்.
முன்னதாக, இரட்டை இலை தொடர்பான வழக்கு ஏற்கெனவே தினகரன் தரப்பு கோரிக்கையை அடுத்து இன்று நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது. இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அணியினர் பங்கேற்றனர். அமைச்சர் ஜெயக்குமார், கே பி முனுசாமி, மனோஜ் பாண்டியன், வா.மைத்ரேயன் எம்.பி., உள்ளிட்டோர் இந்த விசாரணையில் பங்கேற்றனர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன்படி, தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதிக்க முடியாது என்றும், நவ.10 ஆம் தேதிக்குள் இதனை முடித்துக் கொள்ளலாம் என்றும், நவ.10 ஆம் தேதி என்பது கட்டாயக் கெடு அல்ல என்றும், வசதிப்பட்டபடி அதற்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. எனவே அதற்குள் இந்த விசாரணையை முடித்து விட வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் நெருக்கடியில் உள்ளது.
இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என்று இரு தரப்பும் கூறிவருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணியினரும் ஒன்றாக இணைந்து தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருகிறார்கள். மறு புறத்தில், டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினர் இரட்டை இலை தங்களுக்கே என்று உரிமை கோரி சில ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த முதல் கட்ட விசாரணை கடந்த 6ஆம் தேதி இந்திய தேர்தல் அதிகாரி ஏ.கே.ஜோதி தலைமையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட விசாரணை 13ஆம் தேதி நடந்தது. மூன்றாம் கட்ட விசாரணை கடந்த 23ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர், இரட்டை இலை சின்னம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் 30ஆம் தேதி நடைபெறும் என்று கூறியிருந்தார். அதன்படி, கடந்த அக்.30ம் தேதி தொடங்கிய விசாரணையில், தினகரன் தரப்பு மேலும் நேரம் கேட்க, நவ.1ம் தேதி மதியம் 3 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தது தேர்தல் ஆணையம். இப்போது மீண்டும் ஒரு ஒத்திவைப்பு நவ.6ம் தேதிக்கு!
