twitter politics between s gurumurthy and politicians including sve sekar

தமிழக அரசியல் களம் இப்போது ஒற்றைச் சொல்லால் சூடு பிடித்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்த நிலையில், வேறு ஏதும் அலசுவதற்கு இல்லாத நிலையில், டிவிட்டர் அரசியல் களம் இப்போது சூடுபிடித்துள்ளது. 

பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி, தனது டிவிட்டர் பதிவில் ஆட்சியாளர்கள் கோழைகளாக உள்ளனர் என்ற ரீதியில் ஒரு கருத்தை தெரிவித்தார். அதில் பயன்படுத்திய சொல் ஆண்மையற்ற தன்மை என நேரடிப் பொருள் கொள்ளப்பட்டு, அமைச்சர் ஜெயக்குமாரால் கடுமையாக விமர்சனம் செய்யப் பட்டது. 

இந்நிலையில், தனது பதிவு குறித்து டிவிட்டரிலேயே விளக்கம் கொடுத்தார் எஸ்.குருமூர்த்தி. இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் பாஜக., பிரமுகரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்வி. சேகர் தனது டிவிட்டர் பதிவில்,
“மஹா பெரியவரின் படம் அரசியல் சித்து விளையாட்டு விமர்சனங்களில் profile படமாக உபயோகிக்கப்படுவது அவரின் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தர்ம சங்கடத்தையும் மன வருத்தத்தையும் கொடுக்கிறது என்பதை சம்மந்தப்பட்ட மாமேதைகள் புரிந்து கொள்ள வேண்டும். Fight with Ur own face” என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தனது டிவிட்டர் பதிவுகளில் காஞ்சி மகாபெரியவரின் படத்தைத்தான் ப்ரொபைல் படமாக வைத்துள்ளார். அதற்கு அவரது குடும்பமே காஞ்சி பரமாசார்யரின் பக்தர்கள் என்பதும் ஒரு காரணம். ஆகவே இது அவரவர் உரிமை என்பதுடன், தனது சொந்தப் பெயரில்தான் எஸ்.குருமூர்த்தி தனது பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் கவனிக்கத் தக்கது. 

மஹா பெரியவரின் படம் அரசியல் சித்து விளையாட்டு விமர்சனங்களில் profile படமாக உபயோகிக்கப்படுவது அவரின் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தர்ம சங்கடத்தையும் மன வருத்தத்தையும் கொடுக்கிறது என்பதை சம்மந்தப்பட்ட மாமேதைகள் புரிந்து கொள்ள வேண்டும். Fight with Ur own face 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/jBO7ZLH8Cl

— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 26, 2017

ஆனால், ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த அமைப்பை நிர்வகித்த எஸ்.குருமூர்த்தியை, அதே குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியான பாஜக.,வில் இருக்கும் எஸ்.வி.சேகர் வெளிப்படையாக இப்படி விமர்சித்திருப்பது குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். 

எஸ்.வி.சேகர் தனது இன்னொரு பதிவில், சனிப்பெயர்ச்சி குருவையே ஆட்டிப்பாக்க ஆரம்பிச்சுடுச்சு போல. குருவுக்கும் நாக்குல வாக்குல சனி... என்று குறிப்பிட்டிருக்கிறார். 

ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக., பெற்ற படுதோல்வி அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி அனுதாபிகள் பலரும் வெளிப்படையாக தங்கள் டிவிட்டர் பேஸ்புக் பதிவுகளில் விமர்சித்து வரும் நிலையில், கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள எஸ்.வி.சேகர் போன்றவர்களும் டிவிட்டர் அரசியலில் இப்போது ஈடுபட்டு வருகின்றனர்.