"ஆட்சி கலையக்கூடாது எடப்பாடியும் நம்ம கண்ட்ரோல்ல இருக்கணும்"... தினகரனுக்கு பாடம் எடுத்த சசிகலா!
திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த தினகரன், ஆட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, என்னென்னவோ செய்து பார்க்கிறார். ஆனால், எடப்பாடியோ, அமைச்சர்களோ கொஞ்சமும் அசைந்து கொடுப்பதில்லை.
என்ன செய்தாலும், ஆட்சியை கலைக்க போவதில்லை, அதனால், நடப்பது நடக்கட்டும் என்று, முதல்வரும், அமைச்சர்களும் தினகரனின் ஆட்டத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இதனால், வெறுத்துப்போன தினகரன், நேற்று கர்நாடக அதிமுக பொறுப்பாளர் புகழேந்தியுடன், பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து பேசி இருக்கிறார்.
அப்போது, முதல்வர் எடப்பாடியோ, அமைச்சர்களோ, நான் சொல்வது எதையும் கேட்பது இல்லை. இதே நிலை தொடர்ந்தால், கட்சி என்னாகுமோ? என்று கவலையாக இருக்கிறது என்று சசிகலாவிடம் கூறி இருக்கிறார் தினகரன்.
மேலும், 35 எம்.எல்.ஏ க்கள் தற்போது நம் பக்கம் இருக்கிறார்கள். இன்னும் 25 பேருக்கும் மேல் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் 17 மாவட்ட செயலாளர்களும் நம் பக்கம் இருக்கிறார்கள்.
ஆனாலும், நம் ஆதரவாளர்களுக்கு எதுவும் செய்துவிட கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். அவரை முதல்வராக அமர வைத்த உங்களுக்கு அவர் விசுவாசமாக இல்லை என்றும் தினகரன் கூறி இருக்கிறார்.
இதே நிலை தொடர்ந்தால், நம் பக்கம் உள்ள எம்.எல்.ஏ க்கள், மறுபடியும் எடப்பாடி பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்றும் அச்சம் தெரிவித்து இருக்கிறார் தினகரன்.
அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட சசிகலா, ஆட்சி என ஒன்று இருக்கும் வரைதான் நமக்கு மரியாதை. அதை இழந்துவிட்டால், வரும் தேர்தலில் பத்து தொகுதிகளில் ஜெயிப்பது கூட கஷ்டம் என்று சொல்லி இருக்கிறார்.
மேலும், ஆட்சி கலையாத வகையில், கையில் இருக்கும் 60 எம்.எல்.ஏ க்களுடன், மேலும் சில அமைச்சர்களையும் சேர்த்துக்கொண்டு, எடப்பாடியை எந்த அளவுக்கு, வளைக்க முடியுமோ, அந்த அளவுக்கு வளைத்து பிடித்து, காரியத்தை சாதிக்க முயற்சி செய் என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார்.
அதனால், எம்.எல்.ஏ க்களை வளைத்தும், வழிக்கு கொண்டுவர முடியாத எடப்பாடியை, எப்படி வளைப்பது? என்று, தொடர்ந்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அநேகமாக, தினகரனின் அடுத்த குறி சில அமைச்சர்களை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.