முதல்வரை கட்சி பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் டிடிவிக்கு இல்லை: வெல்லமண்டி நடராஜன்
அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத டிடிவி, முதலமைச்சரை கட்சி பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்றும், தினகரனை ஜெ. ஆன்மா மன்னிக்காது என்றும் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, தனக்கு எதிராக செயல்படும் மாவட்ட நிர்வாகிகளை பொறுப்பில் இருந்து டிடிவி தினகரன் நீக்கம் செய்து வருகிறார். கோகுல இந்திரா உள்ளிட்ட பலரையும் கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். அதற்கு பதிலாக தனது ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் டிடிவி தினகரன் நியமித்தும் வருகிறார்.
டிடிவி தினகரன் கட்சியிலேயே இல்லாதபோது, அவரின் நீக்கம் செல்லாது என்று அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கூறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்வதால், அதிருப்தியடைந்தவர்கள் டிடிவி தினகரன் உருவபடத்தை எரித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், டிடிவி தினகரன், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக எஸ்.கே.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
டிடிவியின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தினகரனுக்கு முதலமைச்சரை கட்சி பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்று வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.
முடிந்தால், தினகரன், என்னைக் கட்சிப் பதவியில் இருந்து நீக்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கிய தினகரனை, ஜெயலலிதா ஆன்மா கண்டிப்பாக மன்னிக்காது என்றும் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மான அல்ல, எதையும் சமாளிப்பார் என்றும் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.