சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு !! ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அன்று தினகரன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு !!!
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் 21 ஆம் தேதி அதாவது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலன்று நேரில்ஆ ஜராக வேண்டும் என டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து அவரது ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனும் போட்டியிட்டனர்.
இருவரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்திடம் பஞ்சாயத்தைக் கூட்டடியதால் அச்சின்னம் முடக்கப்பட்டது.
இதையடுத்து டி.டி.வி.தினகரன் தொப்பு சின்னத்திலும், மதுசூதனன் மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதே நேரத்தில் இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற டிடிவி தினகரன் மீதும் தரகராக செயல்பட்டதாக பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் மீதும் வழக்கு தொடரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்த வழக்கு விசாரணையில் கடந்த ஜூலை மாதம், தில்லி போலீஸார் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், டெல்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் டி.டி.வி.தினகரன் வரும் 21 ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதே தேதியில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.