TTV Dinakaran supporter Vetrivel interview

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வெற்றிவேல், இந்த வீடியோவை வெளியிட்டதை அடுத்து, வெற்றிவேல் மீது காவல்துறை இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு வெற்றிவேல் பேட்டி அளித்தார். அப்போது, ஜெ. மரணம் பற்றி விசாரணை நடந்து வரும் வேளையில், வீடியோ வெளியிட்டால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார். 

சசிகலாவின் மீதான களங்கத்தை துடைக்கவே, மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெற்று வந்த வீடியோவை தாம் வெளியிட்டதாக கூறினார். சசிகலா சொல்லித்தான், டிடிவி தினகரனிடம் என்னிடம் ஜெ. வீடியோவை கொடுத்தார். வீடியோவை வெளியிட்டதற்காக தினகரன் தம்மை திட்டியதாகவும் கூறினார்.

மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெற்று வந்த வீடியோவை, சசிகலா, தினகரன் சொல்லி நான் வெளியிடவில்லை., இதனை சத்தியம் செய்து நிரூபிப்பேன் என்றார். மருத்துவமனையில் ஜெ. எப்படி இருந்தார் என்பது அமைச்சர்களுக்கு தெரியும்.

ஜெ. பற்றி தாம் வெளியிட்ட வீடியோ முற்றிலும் உண்மையானது. மோசடியான வீடியோ வெளியிட்டு விட்டு ஓடிவிட முடியாது என்றும் வெற்றிவேல் கூறினார். சசிகலா, ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்புவதை தடுக்கவே வீடியோவை வெளியிட்டேன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் ஜெ. வீடியோ வெளியிட்டது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த வெற்றிவேல், எப்போது வீடியோ வெளியிடுவது என்பதை தாம்தான் முடிவு செய்ய வேண்டும். வீடியோவை வெளியிட வேண்டும் என்று இன்று காலையில்தான் முடிவு செய்தேன். ஜெ. குறித்து இன்னும் சில வீடியோக்கள் உள்ளது. அவை 3 பேரிடம் உள்ளன என்றார்.

தேர்தலுக்காக இந்த விடியோவை பயன்படுத்தும் அளவுக்கு கீழ்த்தரமானவன் அல்ல. ஜெ. வீடியோவை வெளியிட்டதற்காக சசிகலா, தினகரனிடம் மன்னிப்பு கேட்பேன். விசாரணை ஆணையம் கேட்டால், வீடியோக்களை தாக்கல் செய்வேன். தாம் வெளியிட்ட வீடியோவில் எந்த எடிட்டும் செய்யப்படவில்லை என்று வெற்றிவேல் கூறினார்.