ஓபிஎஸ் ஆலோசனை எதிரொலி - எம்எல்ஏக்கள், மா.செக்களுக்கு டிடிவி அவசர அழைப்பு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்ததது. சசிகலா ஆதரவு அணி, ஓபிஎஸ் ஆதரவு அணி என பிரிந்து அதிகார சண்டை நடைபெற்றது. சசிகலா தரப்பு 122 எம்எல்ஏக்களை கடத்திச் சென்று கூவத்தூர் தனியார் விடுதியில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவர் முதலமைச்சராக முயன்றார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்ததையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த இக்கட்டான நிலையில், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று முதலமைச்சரானார்.
ஆனால், அதிமுகவில் மற்றொரு அணிக்கு தலைமை தாங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனது கரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சசிகலா மீது நம்பிகையில்லாமல் இருக்கும் எம்எல்ஏக்களை தம் பக்கம் இழுக்க ஓபிஎஸ் முயற்சிப்பதாக ஒரு தகவல் வெளியானதால் டி.டி.வி.தினகரன் தரப்பு ஆடிப் போயுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்கள் தொகுதிக்குச் செல்லும் எம்எல்ஏக்களை பொது மக்கள் விரட்டி அடிப்பதால் எம்எல்ஏக்களும் வெறுப்பில் உள்ளனர்.
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் அணிக்கு சென்று விடாமல் தடுக்கும் வகையில் தினகரன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இன்று சென்னைக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த தினகரன் திட்டமிட்டுள்ளார்.
எம்எல்ஏக்கள் வேறு அணிக்கு சென்று விடாமல் இருக்க அவர்களுக்குத் தேவைவயான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடைபெறவுள்ள இந்த கூட்டம் ரகசிய கூட்டம் என்பதால் போயலு கார்டனில் நடைபெறும் என தெரிகிறது.