அன்னிய செலாவணி மோசடி வழக்கு - டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர்!!
கடந்த 1996-97ம் ஆண்டில் டி.டி.வி தினகரன் இங்கிலாந்தின் வர்ஜின் தீவில் பர்க்லே வங்கி மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம், ஐரோப்பா லண்டன் ஹாப்ஸ் கேரப்ட் ஓட்டல் பெயரில் முதலீடு செய்தது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல், டிப்பர் இன்வெஸ்மென்ட், பேனியன் டிரீ, டர்க்கி என்ற நிறுவனங்களுக்கு 36.36 லட்சம் அமெரிக்க டாலரையும், 1 லட்சம் பவுண்ட் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு வழக்கும் அமலாக்கப் பிரிவால் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தினகரன் மீது கடந்த ஏப்ரல் 19ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை 3 மாதத்திற்குள் விரைந்து முடிக்கவும், ஏற்கனவே செய்யப்பட்ட குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்து புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து இந்த வழக்கு கடந்த எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பினரும், அமலாக்க துறையினரும் வாதாடினர்.
இதை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் குளறுபடி இருப்பதாக தினகரன் தரப்பினர் கூறியது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி புதிய குற்றச்சாட்டு வரும் 1ம் தேதி (இன்று) பதிவு செய்யப்படும் எனக்கூறி வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதற்காக டிடிவி.தினகரன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.