டிடிவியும் சசிகலாவும்தான் கட்சியை வழிநடத்துவார்கள் – ஒரே போடு போட்ட தென்காசி எம்.பி...
டிடிவியும் சசிகலாவும், கட்சியை வழிநடத்துவார்கள் எனவும் அதிமுக தொண்டர்கள் சசிகலா ஆலோசனைப்படி செயல்படுவார்கள் எனவும் தென்காசி எம்.பி வசந்தி முருகேசன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய டிடிவி தினகரனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து கொண்டே போகிறது.
டிடிவி தினகரன் மீண்டும் கட்சியில் இணையும் போது ஒ.பி.எஸ் தரப்பில் இருந்தும் மக்கள் தரப்பில் இருந்தும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.
அதையும் மீறி ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்ப்பாளராக நின்றார் டிடிவி தினகரன். அவருக்கு அமைச்சர்களின் ஆதரவும், எம்.எல்.ஏக்களின் ஆதரவும் இருந்ததால் பணபட்டுவாடா தாராளமாக புழங்கியது.
இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது. மேலும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதில் சிறைக்கும் சென்றார். இதை பயன்படுத்தி கொண்ட ஒ.பி.எஸ் அணி இ.பி.எஸ் அணியை தன் பக்கம் இழுக்க வசமாக திட்டம் தீட்டியது.
சசிகலா குடும்பத்தை அதிகார பூர்வமாக நீக்கினால் இணைய தயார் என்று அறிக்கையை வெளியிட்டனர் ஒ.பி.எஸ் அணியினர். ஆட்சி நிலைத்தால் போதும் என்ற நோக்கத்தில் இ.பி.எஸ் அணியினர் நாங்களும் தயார் என வாக்குறுதி கொடுத்தனர். தினகரனை அதிமுகவினர் யாரும் பார்க்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியே அளித்தார்.
ஆனால் விதியை மாற்ற முடியாது என்பது போல என்ன சித்து வேலைகள் போட்டும் கடைசிவரை இரு அணிகள் ஒன்றாக இணையவில்லை.
இதையடுத்து டிடிவி தினகரன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். வெளியே வந்த தினகரனை ஒரு ஒரு எம்.எல்.ஏக்களாக நேரில் சென்று பார்த்து ஆதரவு தெரிவித்தனர்.
போக போக இரண்டு நாட்களில் 33 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் டிடிவியை கட்சியில் இருந்து விளக்கமுடியாத நிலையில் இ.பி.எஸ் அணி தவித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது தென்காசி எம்.பி வசந்தி முருகேசன் டிடிவி தினகரனை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வசந்தி முருகேஷன், கட்சியை டிடிவியும், சசிகலாவும் வழிநடத்துவார்கள் எனவும், அதிமுக தொண்டர்கள் சசிகலா ஆலோசனைப்படி செயல்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
விரைவில் கட்சி பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி அனைவரும் ஒன்று சேர்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.