தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.. திமுகவை விளாசிய டிடிவி தினகரன்
எஞ்சிய 4 ஆண்டுகளில் இன்னும் என்னென்ன தண்டனைகளை பரிசுகளாக வாக்களித்த மக்களுக்கு வாரி வழங்கப்போகிறார்களோ?! தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
தமிழக அரசு, கடந்த மாதம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்துவரியை உயர்த்திய நிலையில், ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த முடிவு செய்துள்ளது. சட்டமன்றத்தில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதாவின் மூலம், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை நிர்வகிக்கும் சட்டங்களில் மேம்படுத்தப்பட்ட சொத்து வரிக்கான புதிய பிரிவுகளை சேர்க்க தமிழக அரசு முயற்சி செய்துள்ளது. சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி முதல் 1200 சதுர அடி வரை 75 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே, 600 சதுர அடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215 உயர்த்தப்பட்டிருக்கிறது. 1,201 சதுர அடி முதல் 1,800 சதுரஅடி வரை 100 சதவீதத வரி உயர்வும், 1,801 சதுர அடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவீத சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரியை மனசாட்சி இல்லாமல் 150% வரை உயர்த்திய தி.மு.க அரசு, தற்போது ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதைக் கொண்டாடும் விதமாக இதுபோன்ற தண்டனைகளை பரிசாக மக்களுக்கு கொடுத்திருக்கிறார்களோ?எஞ்சிய 4 ஆண்டுகளில் இன்னும் என்னென்ன தண்டனைகளை பரிசுகளாக வாக்களித்த மக்களுக்கு வாரி வழங்கப்போகிறார்களோ?! தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.