கொஞ்சம் கூட தாமதிக்காமல் உடனே நடவடிக்கை எடுங்க.. மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த டிடிவி.தினகரன்..!
கத்தார் நாட்டு கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கத்தார் நாட்டு கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கத்தார் நாட்டு கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்டு, அந்நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 19 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தூத்தூர், கொடிமுனை, இனையம், ராமன் துறை, மிடாலம், முள்ளூர் துறை, குறும்பனை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த இந்த மீனவர்கள் அனைவரும் கத்தார் நாட்டில் சிறைவைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அரசு நிர்வாகம் அவர்களை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
பாதிக்கப்பட்டுள்ள மீனவர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, மீனவர்கள் அனைவரையும் கத்தாரில் இருந்து சிறை மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.