மதிமுக தலைமை கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை வைகோ, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மதிமுக தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் நடத்தி, அதன் அடிப்படையில் மகனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்தார் வைகோ. இந்நிலையில் துரை வைகோ, தன் தந்தை வைகோவுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கடந்த 5 மாதங்களாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன. தேர்தல் அறிக்கையில் கொடுத்த 500 வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகள் தமிழகம் தேக்க நிலையில் இருந்தது. தற்போது வளரத் தொடங்கியுள்ளது. என்னை நன்றாக பணியாற்றுங்கள் என முதல்வர் என்னை வாழ்த்தினார். வலதுசாரி சித்தாந்தத்திற்கு எதிராக எல்லோரையும் ஒன்றிணைக்கும் அரசியலை நான் முன்னெடுப்பேன்.
தலைமை கழக செயலாளராக என்னுடைய பணிகள் என்ன என்பதை பிறகு சொல்கிறேன். பெரியாரும், பெருமாளும் ஒன்று என நான் சொன்னது, பெரியாரால்தான் நாம் இன்று அனைவரும் கோயிலுக்குள் உள்ளே செல்ல முடிகிறது. அதை மனதில் வைத்துதான் நான் அப்படி சொன்னேன். நான் இறை நம்பிக்கை உள்ளவன்தான்” என்று துரை வைகோ தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்புக்கு முன்பாக துரை வைகோ, அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.
