'முத்தலாக் முறை ஒழுக்கமற்றது - சு.சுவாமியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை"
முத்தலாக் விவாகரத்து முறை ஒழுக்கமற்ற ஒன்று என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முத்தலாக்கில் இருந்து பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்திருந்தார். இதே போல இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரான முத்தலாக்கை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யாநாயுடுவும் நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தங்களின் தனிச்சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதற்கிடையே முத்தலாக்கிற்கு எதிராக பேசிய வெங்கய்யா நாயுடுவுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன்சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், " இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் முத்தலாக் குறித்து குறிப்பிடவில்லை. ஷரியத் சட்டத்தில் மற்றும் முத்தலாக் இருப்பதால் இது நீக்கப்பட வேண்டும். மத பழக்கவழக்கங்கள் அறநெறியை பின்பற்ற வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25 ல் சொல்லப்பட்டுள்ளது."
எங்கேயோ இருக்கும் கணவன், வாட்ஸ்ஏப் மற்றும் குறுந்தகவல் மூலம் மூன்று முறை தலாக் என்று தனது மனைவியை விவகாரத்து செய்வது முட்டாள்தனமானது. இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. சுருக்கமாகச் சொன்னால் முத்தலாக் முறை ஒழுக்கமற்றது. ஒரு குறிப்பிட்ட மதத்தில் மட்டும் இது போன்ற நடப்பதில்லை. சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையும் நான் கடுமையாக கண்டிக்கிறேன்."இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.