ராணுவ அணிவகுப்பு தொடங்குவதற்கு முன் தொடங்கிய ட்ராக்டர் பேரணி.. டெல்லியில் கலவரம். 1 விவசாயி உயிரிழப்பு.
மத்திய டெல்லி ஐடிஓ பகுதியில் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைய முயன்றபோது அங்கு போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்திய டெல்லி ஐடிஓ பகுதியில் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழைய முயன்றபோது அங்கு போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் டாக்டர் கவிழ்ந்ததில் உயிரிழந்ததாக பின்னர் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு சிங்கு எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என ஏற்கனவே விவசாயிகள் அறிவித்திருந்தனர். அவர்களது போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதுடன் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் 12 மணிக்கு மேல் டிராக்டர் அணிவகுப்பை நடத்தி கொள்ளுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஆனால் குடியரசு தின அணிவகுப்பு தொடங்குவதற்கு முன்பே விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பை தொடங்கினார். அவர்கள் இன்று காலை திடீரென செங்கோட்டை பகுதிக்குள் நுழைய முயன்றனர் போலீசார் அவர்களை தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. தடுப்புச் சுவர்களின் மீது மோதி அதை அப்புறப்படுத்திவிட்டு விவசாயிகள் டாக்டர்களுடன் நுழைந்தனர். மத்திய டெல்லி ஐடிஒ பகுதியில் விவசாயிகள் நுழைந்தபோது அங்கு போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் டிராக்டர்களுடன் போலீசாரை மோத முயற்சித்தனர் அப்போது அங்கிருந்து பின்வாங்கிய போலீசார், அருகிலுள்ள கட்டிடங்களுக்குள் ஓடி அங்கிருந்து விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நிஹாங்காக்கள் தங்களை வாலால் தாக்க முற்பட்டதாகவும், விவசாயிகள் காவல் துறையினர் மீது கற்களை வீசி வாகனங்களை சூறையாடியதாகவும் போலீஸார் விவசாயிகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
விவசாயிகள் அணி அணியாக டெல்லி ஐடிஓ பகுதிக்கு படையெடுத்ததால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தி கூட்டத்தி கலைக்க முயற்சித்தனர். அப்போது ஐடிஓ அருகே டிராக்டர் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அதை ஓட்டி வந்த விவசாயி அதன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்தவரின் பெயர் நவ்நீத் சிங் என்பதும், அவர் உ.பியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் விவசாயிகள் மீது நடத்திய தடியடியில், மூன்று விவசாயிகளின் மண்டை உடைந்து பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் போலீசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் அத்துமீறி நடத்திய போராட்டத்தால் மத்திய டெல்லி ஐடிஓ பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.