மாணவர்களைத் தொட்டீங்க... கெட்டீங்க... பள்ளி ஆசிரியர்களை கடுமையாக எச்சரித்த அன்பில் மகேஷ்.!
மாணவர்களைத் துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி ஆசிரியர்களுக்கும் 'ஜீரோ கவுன்சிலிங்' முறை நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை. பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்த உள்ள கவுன்சிலிங் தொடர்பாக கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கொரானா காலத்தில் ஆசிரியர்கள் பணியின்போது இறந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது. மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதுதான் உங்களுடைய பணி. ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது என்று மாணவர்களை சில பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பள்ளிக்கு மாணவர்களை வரவழைப்பது மட்டுமே ஆசிரியர்களின் கடமை. மாறாக, பாகுபாடு பார்ப்பதோ, அவர்களை துன்புறுத்தவோ கூடாது. அப்படி மாணவர்களைத் துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கல்வி தொலைக்காட்சி எப்போதும் போல தொடர்ந்து செயல்படும்.
நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து வெளியான அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்தம், அவர்களை வரவழைப்பது குறித்தும் மட்டுமே விவாதித்தோம். ஆனால், அறிவிப்பில் நர்சரி, கிண்டர் கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது. இதுதொடர்பாக தெளிவான அறிக்கை வெளியிடப்படும்” என்று அன்பிம் மகேஷ் தெரிவித்தார்.